ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் போது மதுபானசாலைகள் திறக்கக் கூடாது என ஜனாதிபதி உத்தரவு போட்டு இருந்த நிலையிலும், யாழ்ப்பாணத்தில் நேற்று (24) ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட போது மதுபானசாலை ஒன்று திறக்கப்பட்டு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக வைரஸை எதிர்கொள்வதற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் போது மதுபான சாலைகளை திறக்க வேண்டாம் என்று ஜனாதிபதி கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட போது யாழ் மாவட்ட செயலகத்தை அண்மித்த சூழலில் அமைந்துள்ள மதுபானசாலை ஒன்று திறக்கப்பட்டு அங்கு மதுபான வியாபாரம் நடைபெற்று உள்ளது. எனினும் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.