யாழ்.மாவட்டத்தில் இன்னமும் கொரோனா வைரஸ் தொற்றத் தொடர்பான அச்சம் நீங்கவில்லை என்று யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
இதனால் வைத்திய சாலையில் உள்ள கொரோனா சிகிச்சை விடுதியில் அனுமதிக்கப்படுபவர்கள் மற்றும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு தொடர்ந்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தகவல் தெரிவித்தார்.
யாழ்.போதனா வைத்திய சாலையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-
யாழ்.போதனா வைத்திய சாலையும், யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடமும் இணைந்து கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான மருத்துவ ஆய்வுகூட பரிசோதணை சிறப்பாக மேற்கொள்ளப்படுகின்றது.
பலருடைய உறுதுணையில் மேற்கொள்ளப்படும் இந்த பரிசோதனை பாதுகாப்பான முறையிலும் நம்பகரமானதுமாக நடாத்தப்படுகின்றது. குறிப்பாக இந்த பரிசோதனையில் பல கட்டங்கள் உள்ளது. ஒவ்வொரு கட்டமும் நேர்த்தியான முறையில் செய்யப்படுகின்றது.
வடபகுதியில் பரிசோதனையில் இந்த பரிசோதனைக்காக உதவிபுரிகின்றவர்களுக்கு நன்றி கூறிக் கொள்ளுகின்றேன்.
உடல் நலம் தொடர்பில் எவருக்கேனும் பிரச்சினைகள் அல்லது மாற்றங்கள் இருக்குமாக இருந்தால் அவர்கள் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும். பிரதேச வைத்திய சாலைகள் அல்லது சிறிய வைத்திய சாலையில் உள்ள வைத்தியர்களினாலேயே போதனா வைத்திய சாலைக்கு நோய் சந்தேக நபர்களை அனுப்பிவைக்க முடியும்.
கடந்த 5 நாட்களாக நடந்த பரிசோதனையில் எவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டமை உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும் யாழ்.மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று இருக்கலாம் என்ற அச்சம் உள்ளது.
இதனால் போதனா வைத்திய சாலையில் உள்ள கொரோனா சிகிச்சை விடுதியிலும், வைத்திய சாலைக்கு வெளியிலும் கொரோனா வைரஸ் நோய் தொற்றாளர்களுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள் தொடர்ந்தும் பரிசோதணை மேற்கொள்ளப்படும் என்றார்.